ஆன்லைனில் பெண்களின் படத்தை வெளியிட்டு விபசாரத்திற்கு அழைத்து பணம் பறித்தவர் கைது


ஆன்லைனில் பெண்களின் படத்தை வெளியிட்டு விபசாரத்திற்கு அழைத்து பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2020 2:57 AM GMT (Updated: 22 Sep 2020 2:57 AM GMT)

ஆன்லைனில் பெண்களின் படத்தை வெளியிட்டு விபசாரத்திற்கு அழைத்து பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

மேட்டூர்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் பெண்களின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு விபசாரத்திற்கு பெண்கள் இருப்பதாகவும், தேவைக்கு தன்னை தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டு செல்போன் எண்களை வெளியிட்டுள்ளார்.

அந்த எண்ணில் தொடர்பு கொள்பவர்களிடம் ஏமாற்றி பணத்தை பெற்று கொண்டு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்குமாறும், பெண்கள் சிறிது நேரத்தில் அங்கு வருவார்கள் என்று கூறிவிட்டு தலைமறைவாகி விடுவாராம். இதுபோன்று பலரிடம் ஏமாற்றி பணத்தை பறித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது

இந்த நிலையில் மேச்சேரி பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு மேட்டூருக்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறினாராம். இதனை நம்பி மேட்டூர் வந்த கார்த்திகேயன், வசந்தகுமார் கூறிய இடத்தில் காத்திருந்தார். இதுகுறித்து வசந்தகுமார் மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு கார்த்திகேயனிடம் பணத்தை கொடுக்க சென்றார்.

அப்போது மேட்டூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கார்த்திகேயனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story