நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்


நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 22 Sep 2020 3:18 AM GMT (Updated: 22 Sep 2020 3:18 AM GMT)

உத்தமபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் மனு அளிக்க வந்தனர். அதன்படி, உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெற வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்கள் அளித்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த மக்கள் தனித்தனியாக புகார் மனுக்கள் அளித்தனர். அதன்படி மொத்தம் 112 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். அந்த மனுக்களில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

உத்தமபாளையத்தில் கடந்த 32 ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அங்கு மக்கள் வைப்புத்தொகையை வாங்கி, முதிர்வு காலம் முடிந்தவுடன் வட்டியுடன் திருப்பிக்கொடுத்து வந்தனர். அந்த நிதி நிறுவனம் சார்பில் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துவிட்டார். இந்தநிலையில் நிதி நிறுவனத்தில் முதிர்வு தொகையை திருப்பிக்கொடுக்காமல் இருந்தனர். கடந்த ஒருவாரமாக நிறுவனம் மூடப்பட்டு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொகையை திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வைப்புத் தொகை மற்றும் ஏலச்சீட்டு தொகை என செலுத்திய ரூ.70 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி அனைவருக்கும் பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு நிறுவனம்

இதேபோல், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில், “தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில் எதிர்புறம் ஒரு தனியார் நிதி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டது. அங்கு செலுத்தும் பணத்துக்கு அதிக வட்டி மற்றும் பணத்துக்கு இணையான நிலம் தருவதாக கூறினர். அதை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பணம் செலுத்தினர். மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை தவணையாக செலுத்தினர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. மீண்டும் செயல்படவில்லை. இங்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இருந்து பெற்ற ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

பணியாளர்கள் பற்றாக்குறை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அப்துல்லா பத்ரி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், “தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வார்டு 400-ல் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டில் எலி தொல்லை அதிக அளவில் உள்ளது. நோயாளிகளின் கால்களை எலிகள் கடித்து காயப்படுத்துகிறது. இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

கோம்பை தென்னை உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் அம்சராஜ் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், “கோம்பை பகுதியில் மின்வாரிய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மின்தடை ஏற்பட்டால் சீரமைப்பது தாமதம் ஆகிறது. விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து கடந்த ஆண்டே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் தீர்வு காணவில்லை. எனவே, கோம்பையில் மின்வாரிய பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்கி, கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story