சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது


சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2020 4:11 AM GMT (Updated: 22 Sep 2020 4:11 AM GMT)

சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சரவணம்பட்டி,

கோவையை அடுத்த சரவணம்பட்டி சித்ராநகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). ஓய்வுப்பெற்ற தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி மாசிலாமணி. இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் துரைசாமி தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி தனக்கு சொந்தமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்த விவசாய நிலத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்றதாக தெரிகிறது. இந்த பணத்தை தனது வீட்டில் பீரோவில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி துரைசாமி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த துரைசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.30 லட்சம் மற்றும் 10 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

2 வாலிபர்கள் கைது

இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்படி, கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் சரவணம்பட்டி காவல்நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் சரவணம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிபிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரமடை மங்கலகரைபுதூரை சேர்ந்த கணேஷ்குமார் (34), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த பிரசாத்ராஜா (27) என்பதும், இவர்கள் 2 பேரும் துரைசாமி வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.16 லட்சத்து 57 ஆயிரம் மற்றும் 5½ பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

வழிப்பறி வழக்குகள்

தொடர் விசாரணையில், திருட்டு வழக்கில் கைதான கணேஷ்குமார் மீது கோவையில் 20-க்கும் மேற்பட்ட வழிபறி வழக்குகள் உள்ளதும், பிரசாத் ராஜா மீது ஊட்டில் கஞ்சா விற்பனை வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் துரைசாமி வீட்டில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பணத்தை திருடிக்கொண்டு சென்னை சென்ற 2 பேரும் விடுதியில் தங்கியிருந்து நண்பர்களுடன் ஆடம்பரமாக இருந்துள்ளனர். மேலும் திருடிய பணத்தில் பிரசாத் ராஜா தனது மனைவிக்கு தங்க நகைகள் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதுபோக மீதம் இருந்தபணத்தை மட்டுமே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story