நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு


நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 4:51 AM GMT (Updated: 22 Sep 2020 4:51 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் இரவு 10 மணியளவில் பிங்கர்போஸ்ட் வி.சி. காலனி பகுதியில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்த மதியழகன்(வயது 48), அவரது மகன் சஞ்சய்(18) மற்றும் பிரசாந்த்(23) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராட்சத மரம் விழுந்ததில் 3 வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன. மேலும் தைலம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வந்த தற்காலிக ஷெட் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மரங்கள் சாய்ந்தன

இதற்கிடையில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா மற்றும் சூட்டிங்மட்டம் பகுதியில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சூட்டிங்மட்டம் முன்பு சாலையோரத்தில் போடப்பட்டு இருந்த பெட்டி கடை தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் மரக்கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் மீது மரம் சாய்ந்து விழுந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடுங்குளிர் நிலவியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வீதிகளில் சென்றதையும், குளிரை போக்க கம்பிளி ஆடைகளை அணிந்து இருந்ததையும் காண முடிந்தது.

மின் வினியோகம் துண்டிப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சூறாவளி காற்றும் வீசுகிறது. இதனால் ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் கூடலூர், பந்தலூர், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 9 மணி வரை மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கூடலூரில் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நேற்று கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை, 27-வது மைல், நடுவட்டம், பைக்காரா உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதேபோன்று கூடலூரில் இருந்து பெரியசோலைக்கு செல்லும் சாலையில் பார்வுட் என்ற இடத்தில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் கூடலூர்-ஓவேலி இடையே காலை 8.30 முதல் 9.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேலும் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி என்ற இடத்தில் மரம் சாய்ந்து விழுந்தது. உடனே தேவாலா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் சென்று மரத்தை அகற்றி, பாதிக்கப்பட்டு இருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து கூடலுர் அருகே புளியாம்பாரா மற்றும் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி, கோட்டப்பாடி, கரியசோலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளும் அறுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு மின்வாரிய மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் மரங்களை வெட்டி அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சூறாவளி காற்றும், பலத்த மழையும் காணப்படுவதால் மின்வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குந்தா, கெத்தை, எமரால்டு, அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

Next Story