சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்கிறார்கள்: ஜெயிலிலுக்கு சென்று வந்தவர்களை புறக்கணிக்க கூடாது கலெக்டர் பேச்சு


சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்கிறார்கள்: ஜெயிலிலுக்கு சென்று வந்தவர்களை புறக்கணிக்க கூடாது கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2020 5:56 AM GMT (Updated: 22 Sep 2020 5:56 AM GMT)

சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலர் குற்றம் செய்கிறார்கள். ஜெயிலுக்குச் சென்று வந்தவர்களை இந்தச் சமூகத்தினர் புறக்கணிக்கக்கூடாது என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் ஜெயிலில் இருந்து விடுதலையான ஏழை, எளிய, ஆதரவற்ற 9 பேருக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சட்ட ஆலோசகர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி 9 பேருக்கு தொழில் தொடங்க தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2¼ லட்சம் கடனுதவி மற்றும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 13 ஜெயில்களுக்கு 10 ஆயிரம் முகக்கவசம், கைகழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

சமூகத்தினர் புறக்கணிக்க கூடாது

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஊருக்கு நடுவே ஜெயில்கள் அமைக்கப்பட்டது. அதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தான். அவர்களின் ஆட்சிக்குபின்னர் ஊருக்கு வெளியே ஜெயில்கள் கட்டப்பட்டன. ஜெயிலில் தண்டனை பெறுபவர்களுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தண்டனை காலம் முடிந்த பின்னர் அந்தத் தொழில் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அந்த ஏற்பாடு. ஜெயில் என்பது தண்டனை வழங்கும் இடமல்ல. குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழும் இடம்.

ஜெயிலில் தண்டனை அனுபவிப்பவர்கள் 2 வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று தொடர் திருட்டு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள். மற்றொன்று சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள். தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை திருத்த முடியாது. அவர்களாக திருந்தினால் தான் உண்டு. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றம் செய்தவர்கள் ஜெயிலுக்குச் சென்ற சில நாட்களிலேயே அதனை உணர்ந்து விடுவார்கள். அவர்களை மற்றவர்கள் பார்த்தால் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து செல்வார்கள். ஜெயிலுக்குச் சென்று வந்தவர்களை சமூகத்தினர் புறக்கணிக்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்தி சிறந்த மனிதனாக்க வேண்டும். ஜெயிலுக்குச் சென்று வந்தவர்கள் தொழில் தொடங்க அரசு மானிய விலையில் கடனுதவி வழங்கி வருகிறது. இந்தச் சங்கம் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 140 பேருக்கு ரூ.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில், சங்க பொருளாளர் சீனிவாசன், குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.

Next Story