தூத்துக்குடி அருகே, திருட்டு வழக்கில் கைது: தப்பி ஓடிய கைதி பிடிபட்டார் 2 நாளில் பல்வேறு இடங்களில் கைவரிசை


தூத்துக்குடி அருகே, திருட்டு வழக்கில் கைது: தப்பி ஓடிய கைதி பிடிபட்டார் 2 நாளில் பல்வேறு இடங்களில் கைவரிசை
x
தினத்தந்தி 23 Sep 2020 4:24 AM GMT (Updated: 23 Sep 2020 4:24 AM GMT)

தூத்துக்குடி அருகே கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய கைதி நேற்று மாலை பிடிபட்டார். அவர் 2 நாளில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள நடுவக்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் மாயகிருஷ்ணன் என்ற தெய்வக்குழந்தை (வயது 22). இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை புதியம்புத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், போலீஸ்காரர் சுடலை ஆகியோர் கடந்த 20-ந்தேதி இரவில் காரில் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் அல்லிகுளம் பகுதியில் சென்றபோது, ஒரு வேகத்தடையில் கார் மெதுவாக சென்று உள்ளது. அப்போது, காரில் பின்னால் இருந்த மாயகிருஷ்ணன் திடீரென கதவை திறந்து கீழே குதித்து தப்பி சென்று விட்டார்.

தூத்துக்குடியில் பிடிபட்டார்

இதுகுறித்து தட்டப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், தப்பி ஓடிய மாயகிருஷ்ணனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் மாயகிருஷ்ணன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாலை அங்கு சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

தொடர்ந்து மாயகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கடந்த 2 நாட்களில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அவர் புதுக்கோட்டை அருகே திருவனந்தபுரம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திருடி உள்ளார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டை மாற்றி, அதன்மூலம் சுற்றி உள்ளார். தொடர்ந்து நடுவக்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் ரூ.3 ஆயிரம் திருடி உள்ளார். மற்றொரு வீட்டில் திருட முயற்சி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story