பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2020 10:30 AM GMT (Updated: 23 Sep 2020 10:17 AM GMT)

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் அட்வகேட் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சங்க வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், அதன் நம்பகத்தன்மையை ஆராயமலும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு அறிவிப்பு கொடுக்காமலும் எவ்வித விசாரணையும் இன்றி வழக்கறிஞர் தொழில் செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முடிவை கண்டித்தும், வழக்கறிஞர்களை பாதிக்கும் இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஒருநாள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி பெரம்பலூரில் அட்வகேட் அசோசியேசன் அமைப்பின் சார்பில் நேற்று வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் கிருஷ்ணராஜ், பொருளாளர் சிவசங்கரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story