இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சரண் அடைந்தவரை 4 நாள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சரண் அடைந்தவரை 4 நாள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 24 Sep 2020 4:45 PM GMT (Updated: 24 Sep 2020 4:40 PM GMT)

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சரண் அடைந்தவரை போலீஸ் காவலில் விசாரிக்க கோவை கோர்ட்டு 4 நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

கோவை,

கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜு (வயது 37). இந்து முன்னணி பிரமுகர். இவர் ராம்நகரில் சோடா கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் நிதீஷ்குமாரை, ராம்நகரை சேர்ந்த சிலர் கத்தியால் குத்தினர்.

கத்தியால் குத்தியவர்களை காப்பாற்ற முயன்றதாக பிஜு மீது சந்தேகித்து அவரை 7 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்றது. இந்த கொலை குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்த கொலையில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆறுமுகத்தை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஆறுமுகம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ஆறுமுகத்தை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க கூடாது என்று அவரது தரப்பு வக்கீல் பால்பாண்டி ஆஜராகி வதாடினார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தம், ஆறுமுகத்தை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை விசாரணைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.

இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையில் இன்னும் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story