வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை நாங்குநேரியில் குடும்பத்தகராறில் விபரீதம்:


வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை நாங்குநேரியில் குடும்பத்தகராறில் விபரீதம்:
x
தினத்தந்தி 24 Sep 2020 11:15 PM GMT (Updated: 24 Sep 2020 7:59 PM GMT)

நாங்குநேரியில் குடும்ப தகராறு காரணமாக வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 70). இவருடைய மனைவி செல்வமணி (64). இவர்கள் அங்குள்ள செங்கல்சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு சந்திரசேகரன், ராஜதுரை என்று 2 மகன்கள். இவர்கள் திருமணமாகி, கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை இறந்து விட்டார். இந்த நிலையில் ராஜதுரை மனைவி சாரதாவுக்கும், மூக்கனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சாரதா, நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து மூக்கன், செல்வமணி ஆகிய 2 பேரும் கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.

பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அங்குள்ள சுட்டிப்பாறை குளம் அருகில் மூக்கன், செல்வமணி ஆகிய 2 பேரும் உடல் அழுகிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களுக்கு அருகில் விஷ பாட்டில்களும் கிடந்தன.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று, மூக்கன், செல்வமணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப தகராறு காரணமாக வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story