கொரோனா பாதித்த பசவகல்யாண் தொகுதி காங். எம்.எல்.ஏ. நாராயணராவ் மரணம் எடியூரப்பா - தலைவர்கள் இரங்கல்


கொரோனா பாதித்த பசவகல்யாண் தொகுதி காங். எம்.எல்.ஏ. நாராயணராவ் மரணம் எடியூரப்பா - தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 24 Sep 2020 11:30 PM GMT (Updated: 24 Sep 2020 9:32 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பசவகல்யாண் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணராவ் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதுபோல் பலியானோர் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்த வைரஸ் சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளையும் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரிகள், மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மக்கள் பிரதிநிதிகளில் 75-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரு எம்.எல்.ஏ. உயிரிழந்துள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பீதர் மாவட்டம் பசவகல்யாண் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.நாராயணராவ் (வயது 63). அவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த 1-ந் தேதி பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக அவர் கவலைக்கிடமான நிலையை அடைந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4 மணியளவில் மரணம் அடைந்தார்.

அவர் முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் ஏற்கனவே எம்.பி.க்கள் அசோக் கஸ்தி, சுரேஷ் அங்கடி ஆகியோர் கொரோனாவுக்கு பலியாயினர். இந்த நிலையில் நாராயணராவ் மரணம் மூலம் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story