பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு


பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு
x
தினத்தந்தி 24 Sep 2020 10:30 PM GMT (Updated: 24 Sep 2020 9:55 PM GMT)

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்துள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கோபி, பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் ஏராளமான பேரூராட்சிகள், ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.8 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.8 அடியாக நீடித்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 106 கன அடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

Next Story