வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு


வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 1:19 AM GMT (Updated: 25 Sep 2020 1:19 AM GMT)

வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குன்னம் வட்டத்தின் தலைநகரமாக விளங்கும் குன்னம் கிராமத்தில் கிடைக்கப்பெறும் நிலத்தடி நீர், குடிநீருக்கு உகந்ததாக இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து குன்னம் அருகே உள்ள வெண்மணி கிராமத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்ணாமத்து ஏரிக்கரையின் அருகே உள்ள இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் இணைப்பு மூலமாக குன்னம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து, குன்னம் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதையறிந்த வெண்மணி கிராம மக்கள், குன்னம் கிராமத்திற்கு வெண்மணி பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு சென்றால், எங்கள் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும். மேலும் எங்கள் கிராமத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். எனவே பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை நிறுத்த வலியுறுத்தினர். மேலும் அங்கு வந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டான்லி செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஆழ்குழாய் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டது. அடுத்த வாரத்தில் வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வெண்மணி, குன்னம் ஆகிய 2 கிராம மக்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வெண்மணி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story