பெரம்பலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி; புதிதாக 21 பேர் பாதிப்பு அரியலூரில் 28 பேருக்கு தொற்று


பெரம்பலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி; புதிதாக 21 பேர் பாதிப்பு அரியலூரில் 28 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 25 Sep 2020 1:29 AM GMT (Updated: 25 Sep 2020 1:29 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் 21 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 21 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் வட்டாரத்தில் 7 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 5 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 6 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 3 பேருக்கும் என மொத்தம் 21 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 719 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த லெப்பைகுடிக்காட்டை சேர்ந்த 68 வயது மூதாட்டி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை லெப்பைகுடிக்காட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் அரசின் வழிகாட்டுதலின்படி நல்லடக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் இருந்து 1,570 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 436 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரியலூர் நகராட்சி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 6 பேருக்கும், அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், தா.பழூர் ஒன்றியம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 28 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,576 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். 2,817 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 483 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story