குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 11:00 PM GMT (Updated: 25 Sep 2020 6:58 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் முக்கிய மூன்று நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு விழா 17-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் 17-ந் தேதி அன்று திருவிழா கொடியேற்றத்தின்போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

மேலும் விழாவின் முக்கிய நாளான 1, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்ய இயலும் என்பதற்கு ஏற்ப திருச்செந்தூர் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து பக்தர்கள் வருவதைப்போன்று, இங்கும் அனுமதிக்கலாம்.

சுவாமி புறப்பாடு வெளியில் செல்லாமல் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெறவும், உற்சவ மூர்த்தி வீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறும். இதில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடத்தலாம். திருவிழா நிகழ்வுகளை யுடியூப் மற்றும் உள்ளூர் சேனல்கள் மூலம் பக்தர்கள் காணும் வகையில் ஒளிபரப்பலாம். இந்த ஆண்டு கோவில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் கோவில்களில் விரதத்தை முடித்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கட்டளைதாரர்கள் வாங்கிக்கொடுக்கும் அபிஷேக பொருட்கள் பெற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் அபிஷேகத்தை அமர்ந்து பார்க்க அனுமதி இல்லை. தீயணைப்பு துறையினர் மூலம் தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், போலீஸ் துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்தின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 30-ந் தேதிக்கு பின் தமிழக அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து பொதுமக்களுக்கு இதுகுறித்து மேலும் விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி இயக்குனர் (பஞ்சாயத்துகள்) உமாசங்கர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story