ஆரணி, போளூர், சேத்துப்பட்டில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆரணி, போளூர், சேத்துப்பட்டில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 26 Sep 2020 10:30 PM GMT (Updated: 26 Sep 2020 8:13 PM GMT)

ஆரணி, போளூர், சேத்துப்பட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆரணி 

ஆரணி நகரில் சார்ப்பனார்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை யொட்டி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பதி பாலாஜி அலங்காரத்தில் வரதராஜபெருமாளை அலங் கரித்து மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடை வெளியுடன் முகக் கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி கொடுத்து, தெர்மல் ஸ்கேனர் மூலமாக தட்ப வெட்ப நிலையை கண்டறிந்து கோவிலில் அனுமதிக்கப் பட்டனர்.

இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில், சைதாப் பேட்டை யில் உள்ள சீதாராமர் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

போளுர் வேணுகோபால சாமி பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தது. யோக நரசிம்மர் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு, தேசூர், ஆவணியாபுரம், நெடுங்குணம், இஞ்சிமேடு ஆகிய ஊர்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடு பெருமாள் கோவில்களில் நடந்தது. இஞ்சிமேடு வர தராஜ பெருமாள் கோவிலில் காலையில் வரதராஜ பெருமாள் பெருந்தேவித் தாயார் லட்சுமி நரசிம்மர் ராமர் சீதாதேவி லட்சுமணன் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. சேத்துப்பட்டு சஞ்சீவிராய பெருமாள் கோவில், தேசூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை வழிபாடு நடந்தது.

சிங்கிரிகோவில்

கண்ணமங்கலம் அருகே சிங்கிரிகோவில் நாகநதி வடகரையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.

உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சுவாமிக்கு, திருச்சி ஸ்ரீரங்கநாதர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

செங்கம்

செங்கத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர் களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story