திருச்சி காந்தி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வந்த இந்து தேசிய கட்சி தலைவருக்கு தடை; வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு


திருச்சி காந்தி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வந்த இந்து தேசிய கட்சி தலைவருக்கு தடை; வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Sep 2020 12:12 PM GMT (Updated: 27 Sep 2020 12:12 PM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வந்த இந்து தேசிய கட்சி தலைவருக்கு போலீசார் தடை விதித்தனர். அங்கு வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் மூடப்பட்டு, ஜி-கார்னர் திடலில் இரவு மட்டும் செயல்பட்டு வருகிறது. காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால், வருகிற 13-ந் தேதி வரை காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வியாபாரிகள் அங்கு திரண்டு வந்து, காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் 184 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்து தேசிய கட்சி நிறுவனர்

இந்த நிலையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் போராட்ட நிலை அறிந்து, இந்து தேசிய கட்சி நிறுவனர் மற்றும் மாநிலதலைவர் மணியன், நேற்று பிற்பகல் வந்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம், காந்தி மார்க்கெட் உள்ளே சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் போலீசார், கோர்ட்டு தடை உத்தரவு இருப்பதால் உள்ளே அனுமதிக்க முடியாது என்றனர். தகவல் அறிந்து காந்தி மார்க்கெட் வியாபாரிகளும் அங்கு வரத்தொடங்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது:-

10 மடங்கு போராட்டம் அதிகரிக்கும்

மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை மாவட்ட நிர்வாகம் எதிர்கொண்டு, கொரோனாவுக்காக மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை விரைவில் திறக்க வழி செய்ய வேண்டும். ஏனென்றால் சென்னை உள்பட கொரோனாவால் மூடப்பட்ட மார்க்கெட்டுகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

இனியும் கோர்ட்டு தடை, வாய்தா என தள்ளிக்கொண்டே சென்றால் ஏற்கனவே வியாபாரிகள் நடத்திய போராட்டத்தைவிட 10 மடங்கு அதிகரிக்கும். திருச்சியே ஸ்தம்பிக்கும். எனவே, மீண்டும் எங்களை போராட தூண்டவேண்டாம். எனவே, தமிழக அரசு வருகிற சட்டமன்ற தேர்தலை உணர்ந்து காந்தி மார்க்கெட்டை திறக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story