விற்பனையாளரை தாக்கி டாஸ்மாக்கில் ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த கல்லூரி மாணவர் கைது


விற்பனையாளரை தாக்கி டாஸ்மாக்கில் ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2020 2:42 PM GMT (Updated: 27 Sep 2020 2:42 PM GMT)

மூலனூர் அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

மூலனூர்,

மூலனூர்-தாராபுரம் சாலையில் கரையூரை அடுத்த கவுண்டையன் வலசு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கடையில் கடந்த 7-ந் தேதி விற்பனையான பணத்தை அன்று இரவு விற்பனையாளர் ரமேஷ் எண்ணிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள், ரமேஷ் மீது மிளகாய் பொடியை தூவி, பட்டாக்கத்தியை காட்டி, அவரை தாக்கி ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கல்லூரி மாணவர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மூலனூர் போலீசார் பள்ளபட்டி பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவருடைய பெயர் கலைவாணன் (வயது 21) என்பதும், தஞ்சை குளத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதும், ரமேஷ் மீது மிளகாய் பொடியை தூவி, கத்தியை காட்டி, தாக்கி ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கலைவாணனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கலைவாணனுடன் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story