திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன்கடைகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்


திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன்கடைகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 27 Sep 2020 2:46 PM GMT (Updated: 27 Sep 2020 2:46 PM GMT)

உடுமலையில் நடந்த விழாவில், 77 அம்மா நகரும் ரேஷன் கடைகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன் மூலமாக 8,236 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இதில் உடுமலை தாலுகாவில் 15 அம்மா நகரும் ரேஷன் கடைகள் மூலம் 1,445 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். அம்மா நகரும் ரேஷன் கடை தொடக்க விழா உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் உடுமலையில் நடந்தது. விழாவிற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, அம்மா நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசியதாவது:-

கால்நடை பூங்கா

நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தாய் கடையின் விற்பனையாளர் சென்று பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வார். பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் நடப்பாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள், மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கப்பட உள்ளது.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். நடப்பு ஆண்டில் கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.பிரபு வரவேற்று பேசினார். பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் நர்மதா நன்றி கூறினார். விழாவில் துணைப்பதிவாளர் சேகர், உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்க மேலாண்மை இயக்குனர் ப.தமிழரசு, தலைவர் ஆர்.முருகேசன், துணைத்தலைவர் அ.தங்கவேல், கண்காணிப்பாளர் வி.சிவகுமார், பொதுமேலாளர் பி.ரவி மற்றும் அரசு துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story