நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,853 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,853 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 Sep 2020 3:41 PM GMT (Updated: 27 Sep 2020 3:41 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,853 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 4,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே வெளிமாவட்டங்களை சேர்ந்த 9 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,719 ஆக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று அரசு பஸ் டிரைவர்கள், கபிலர்மலையை சேர்ந்த தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர், மோர்பாளையம் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 2 அரசு பள்ளி ஆசிரியர்கள், அலவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்பட 134 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

பாதிப்பு எண்ணிக்கை 4,853 ஆக உயர்வு

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,853 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 101 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 3,820 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 65 பேர் பலியான நிலையில், 968 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Next Story