திருச்சி அருகே இனாம் குளத்தூரில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமரியாதை


திருச்சி அருகே இனாம் குளத்தூரில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமரியாதை
x
தினத்தந்தி 28 Sep 2020 1:38 AM GMT (Updated: 28 Sep 2020 1:38 AM GMT)

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இங்கு கடந்த 2000-ம் ஆண்டில் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சிலையின் மீது யாரோ மர்ம ஆசாமிகள் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து இருந்தனர். மேலும் சிலை பீடத்திலும் காவி சாயம் பூசப்பட்டு இருந்தது.

நேற்று அதிகாலை இதனை பார்த்த திராவிடர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இனாம்குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி மனு கொடுத்தனர்.

சாலை மறியல்

மேலும் திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தி.க., தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டமும் நடத்தினார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் அவமரியாதை செய்யப்பட்ட பெரியார் சிலை தண்ணீர் ஊற்றி சுத்தப் படுத்தப் பட்டது.

நேரு மாலை அணிவித்தார்

அதன் பின்னர் சிலைக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடும் என்ற பயத்தில் சிலர் இதுபோன்று பெரியார் சிலையை அவமரியாதை செய்யும் காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த செயலை செய்பவர்களுக்கு தான் சிறுமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் இது போன்று பெரியார் சிலை மீது யாராவது கை வைக்க முடியுமா? பெரியார் சிலைக்கு காவி பூசியவர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

இந்த காரியத்தை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். வழக்கு மட்டும்தான் பதிவு செய்வார்கள். நடவடிக்கை எடுத்தால் தங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பின்றி 100 சதவீதம் நலமாக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதேபோல பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story