கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது


கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2020 2:49 AM GMT (Updated: 28 Sep 2020 2:49 AM GMT)

கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் 20 மூட்டைகளில் 960 போலி மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த சிராஜிதின்கான் என்பதும், ஆனேக் கல் பகுதியில் போலியாக மதுபாட்டில்களை தயாரித்து அதில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபாட்டில்கள் போன்று ஸ்டிக்கர் ஒட்டி, அதனை கடத்தியதும், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவருக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கார் டிரைவர் சிராஜிதின்கான் மற்றும் பாப்பாரப்பட்டி ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்த மணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.7 லட்சம் மதிப்பிலான போலி மதுபாட்டில்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story