கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி


கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி
x
தினத்தந்தி 28 Sep 2020 3:19 AM GMT (Updated: 28 Sep 2020 3:19 AM GMT)

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் கூடி நிற்பதால் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

திண்டுக்கல்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தனது கணக்கை தொடங்கியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதன் பின்னர் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு பஸ், ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் விழிப்புணர்வோடு இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.

விழிப்புணர்வு

பொதுமக்களும் நோய் தொற்று பரவிவிடும் என்ற அச்சம் இல்லாமல் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நகர் பகுதியில் சுற்றித்திரிகின்றனர். குறிப்பாக நாகல்நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தொழிலாளர்கள் கூட்டமாக குவிந்து விடுகின்றனர். ஆண், பெண் தொழிலாளர்கள் சாலையோரத்தில் நீண்ட வரிசையில் வேலைக்கு செல்ல காத்திருக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவிடுமோ? என்ற அச்சம் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணிவதன் அவசியத்தை அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story