திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு


திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 Sep 2020 3:29 AM GMT (Updated: 28 Sep 2020 3:29 AM GMT)

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம், தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாத இறுதியில் 60 அடியாக உயர்ந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற் காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போது தொடர்ந்து மழை பெய்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.

கூடுதல் தண்ணீர் திறப்பு

அதன்பேரில் வைகை அணையில் இருந்து ஏற்கனவே திறக்கப்படும் தண்ணீரோடு, நேற்று கூடுதலாக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தமாக கால்வாய் மூலம் வினாடிக்கு 1,800 கன அடியும், மதுரை, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி பகுதி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடியும் சேர்த்து மொத்தமாக வினாடிக்கு 1,872 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது கூடுதலாக திறக்கப்பட்டுள்ள 900 கன அடி தண்ணீர் படிப்படியாக 1,130 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.

இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் உள்ள 98 ஆயிரத்து 764 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் 6 ஆயிரத்து 39 ஏக்கரும் என மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தண்ணீர் இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும், விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story