ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் தாய், குழந்தை சாவு நர்சுகள் சிகிச்சை அளித்ததால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்


ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் தாய், குழந்தை சாவு நர்சுகள் சிகிச்சை அளித்ததால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Sep 2020 12:23 AM GMT (Updated: 29 Sep 2020 12:23 AM GMT)

ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர் இல்லாமல் நர்சுகள் சிகிச்சை அளித்ததால் தான் இருவரும் இறந்தனர் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 23), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அர்ச்சனா (21). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 1½ ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் பிரசவத்திற்காக ராணிப்பேட்டையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அர்ச்சனா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் அர்ச்சனாவுக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது அர்ச்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்திலேயே இறந்தது. இதுகுறித்து அர்ச்சனாவிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அர்ச்சனா மயக்கமாகி உள்ளார். உடனடியாக அவரை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அர்ச்சனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சனாவின் உறவினர்களும், பொதுமக்களும் ராணிப்பேட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இறந்த அர்ச்சனாவின் பிணத்தையும், குழந்தையின் உடலையும் போட்டு டாக்டர் இல்லாமல் நர்சுகளே பிரசவம் பார்த்ததாலும், மருத்துவமனையின் அலட்சியத்தாலும் 2 உயிர்கள் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான காந்தி, வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் உள்ளிட்டோர் அர்ச்சனாவின் உறவினர்களிடம் சமாதானம் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் 2 உயிரிழப்புக்கு காரணமான மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் 2 பிணங்களையும் எடுத்து செல்ல அனுமதிப்போம் என்று கூறி பிரேத பரிசோதனைக்கு பிணங்களை ஏற்றி செல்ல வந்த ஆம்புலன்ஸ் முன்பு மறியல் செய்தனர்.

உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன், காந்தி எம்.எல்.ஏ., இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதையடுத்து 2 பிணங்களும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story