வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 29 Sep 2020 1:02 AM GMT (Updated: 29 Sep 2020 1:02 AM GMT)

புதுவை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் வீடு இடிந்து விழுந்து கணவன், மனைவி பலியானார்கள்.

புதுச்சேரி,

புதுவை அருகே உள்ள அரியாங்குப்பம் புதுக்குளம் அந்தோணியார் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 44). இவரது மனைவி பத்மாவதி(40) இவர்களுக்கு ஷில்பியா (17), அன்னாள் (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மாடி வீட்டின் அருகில் ஒரு பங்களா வீடு உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் லகோத்ராஜ் பிரான்சில் வசித்து வருகிறார். அவரது அனுமதியின் பேரில் அந்த வீட்டை நெப்போலியன் பராமரித்து வந்துள்ளார்.

தற்போது ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், அந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இருந்தும் பட்டாசுகளை வாங்கி யாருக்கும் தெரியாமல் அந்த பங்களா வீட்டில் நெப்போலியன் இருப்பு வைத்து இருந்ததாக தெரிகிறது. மேலும் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் விபத்து ஏற்பட்டு, பங்களா வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.

இந்த வெடிவிபத்தில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் சுமார் 1 மணிநேரத்துக்கு மேலாக வெடித்துக் கொண்டே இருந்தன. இதனால் அந்த வீட்டு சுவர் முழுவதுமாக இடிந்து நெப்போலியன் வசிக்கும் வீட்டில் விழுந்தது. இதில் வீட்டின் சமையல் அறையில் இருந்த நெப்போலியன், பத்மாவதி ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்தநிலையில் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இடிபாடுகளில் சிக்கிய கணவன்-மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்த சமயத்தில் ஒரு மகள் கடைக்கு சென்று இருந்தார். மற்றொருவர் சத்தம் கேட்டதும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர் பிழைத்ததாக கூறினர். பெற்றோரை இழந்த 2 மகள்களும் கண்ணீர்மல்க கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. சம்பவ இடத்துக்கு தாசில்தார் ராஜேஷ்கன்னா, போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் (தெற்கு) ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இந்த பயங்கர வெடிவிபத்து குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெப்போலியன் அந்த பகுதியில் யார், யாரிடம் பட்டாசுகள் வாங்கினார், அவருக்கு உதவியாக இருந்தவர்கள் யார்? என்பன போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Next Story