தூத்துக்குடியில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூரக்கொலை கணவருக்கு வலைவீச்சு


தூத்துக்குடியில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூரக்கொலை கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2020 12:01 AM GMT (Updated: 1 Oct 2020 12:01 AM GMT)

தூத்துக்குடியில் தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40), பெயிண்டர். இவர் ஏற்கனவே தனது 2 மனைவிகளை பிரிந்து, 3-வதாக சண்முகலட்சுமி (44) என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதேபோன்று சண்முகலட்சுமியின் முதல் கணவர் இறந்ததால், கருப்பசாமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னர் கருப்பசாமியும், சண்முகலட்சுமியும் தூத்துக்குடி புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி அரிவாளால் சண்முகலட்சுமியை வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

படிக்கட்டில் வழிந்தோடிய ரத்தம்

பின்னர் கருப்பசாமி, சண்முகலட்சுமி ஆகிய 2 பேரும் கடந்த 28-ந் தேதி தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர். புதிய வீட்டில் அவர்கள் பால் காய்ச்சினர். நேற்று முன்தினம் கருப்பசாமி தனது வீட்டை பூட்டி விட்டு, வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. நேற்று மதியம் கருப்பசாமி வீட்டின் பின்பக்க கதவு வழியாக ரத்தக்கறை வழிந்தோடி வெளியே படிக்கட்டில் படிந்து இருந்தது. கதவு இடுக்கின் வழியாக சேலையும் வெளியே தெரிந்தது. இதனைப் பார்த்த பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி அடைந்து, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக கிடந்தார்

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரின் முன்னிலையில், வீட்டின் கதவை உரிமையாளர் திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் சண்முகலட்சுமி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் ரத்தக்காயமும், கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களும் இருந்தன. அவரது தலையின் அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில், சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அடுப்பு கல்லும் கிடந்தது.

போலீசார் விசாரணை

உடனே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அபிஷேக் குப்தா, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். கொலை நடந்த இடத்தில் போலீஸ் மோப்ப நாய் மோப்பம் பிடித்து, வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து, தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின் ரோடு அருகில் வரையிலும் சென்று திரும்பி வந்தது. ஆனாலும் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கணவருக்கு வலைவீச்சு

கொலை செய்யப்பட்ட சண்முகலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் கருப்பசாமி தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்து விட்டு, தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story