பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: பஸ் நிலையம், கோவில்களில் போலீசார் குவிப்பு


பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: பஸ் நிலையம், கோவில்களில் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 3:33 AM GMT (Updated: 1 Oct 2020 3:33 AM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் பஸ்நிலையம், கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாகவே எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீர்ப்பு வெளியான பிறகு பாதுகாப்பு பணியில் மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். பெரம்பலூர் நகர்பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், துறைமங்கலம் மூன்று ரோடு, நான்கு ரோடு, காமராஜர் வளைவு, ரோவர் வளைவு, கலெக்டர் அலுவலகம், பாலக்கரை ரவுண்டானா, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பள்ளி வாசல்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story