துணிக்கடையில் விளம்பர பேனர் அகற்றியபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி; மற்றொருவர் படுகாயம்


துணிக்கடையில் விளம்பர பேனர் அகற்றியபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி; மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Oct 2020 11:15 PM GMT (Updated: 1 Oct 2020 9:38 PM GMT)

துணிக்கடையில் விளம்பர பேனரை அகற்றியபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

செங்குன்றம்,

செங்குன்றம் ஜி.எஸ்.டி. சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல துணிக்கடை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த கடையில் செங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகர் 9-வது தெருவைச் சேர்ந்த பீட்டர்(வயது 39) என்பவர் வேலை செய்து வந்தார்.

நேற்று கடையின் முன்பு இருந்த விளம்பர பேனர் பழுதாகி இருந்ததால் அதை அகற்றும் பணியில் பீட்டர் மற்றும் 2 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளம்பர பேனர் கட்டி இருந்த இரும்பு கம்பி அருகில் சென்ற மின்கம்பியில் உரசியது.

இதில் மின்சாரம் தாக்கியதில் பீட்டர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு ஊழியர் பிரவீன்(37) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் போலீசார் பலியான பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விபத்து நடந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story