காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கனிமொழி எம்.பி. வழங்கினார்


காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கனிமொழி எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 2 Oct 2020 12:03 AM GMT (Updated: 2 Oct 2020 12:03 AM GMT)

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் வெட்ரன்ஸ் கால்பந்து கழக சார்பில் கால்பந்து போட்டி ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆல்காம் அணியும், ரெட்யூனைட்டெட் அணியும் விளையாடியது. இதில் ஆல்காம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பல்லாக்கு லெப்பை தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் அம்ஜத், விளையாட்டு சங்க செயலாளர் இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்பந்தாட்ட கிளப் தலைவர் இப்ராகிம் வரவேற்று பேசினார்.

கனிமொழி எம்.பி.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, முதல் இடம் பிடித்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். 2-ம் இடம் பிடித்த அணிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

நான் என்னுடைய நாடாளுமன்ற தொகுதியான தூத்துக்குடியில் மற்ற இடங்களுக்கு எல்லாம் மக்களின் பிரதிநிதியாக சென்று வருகிறேன். ஆனால் காயல்பட்டினத்தில் மட்டும் கலைஞரின் மகளாக வருகிறேன். கலைஞர் அவர்களோடு பலமுறை காயல்பட்டினம் வந்திருக்கிறேன். அவருக்கு நீங்கள் அளித்த வரவேற்பை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை.

புல்வெளி மைதானம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான கால்பந்து வீரர்கள் உள்ள நகரம் காயல்பட்டினம். இங்கு 2 பெரிய கால்பந்து மைதானங்கள் உள்ளன. உங்களுடைய இந்த விளையாட்டு பொழுதுபோக்கு மட்டுமில்லாமல், வீரர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்து இந்திய கால்பந்தாட்ட அணியில் சேரும் அளவுக்கு திறமையான விளையாட்டு வீரர்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இங்குள்ள 2 மைதானங்களும் புல்வெளி மைதானம் ஆக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஒரு மைதானத்தை புல்வெளி மைதானம் ஆக்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். மற்றொன்றுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பார். பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காயல்பட்டினம் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் அயூப், சுல்தான் அஹ்மது சாஹிப், அலாவுதீன், தி.மு.க. மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், காயல்பட்டினம் நகர தி.மு.க. பொறுப்பாளர் முத்துமுகம்மது, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு. நகர துணை செயலாளர்கள் மம்மி, கதிரவன், இளைஞர் அணி செயலாளர் கலீலுர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story