கிராம சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி உள்ளார் - அமைச்சர் காமராஜ் பேட்டி


கிராம சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி உள்ளார் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2020 3:15 PM GMT (Updated: 4 Oct 2020 3:14 PM GMT)

கிராம சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி உள்ளார் என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள், வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள், டெங்கு நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், உதவி கலெக்டர்கள் புண்ணியகோட்டி, பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உறுதியான நடவடிக்கையால் கொரோனா நோய் தொற்று ஏற்ற நிலைக்கு சென்று விடாமல் கட்டுக்குள் உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகின்ற வகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் இறங்கு முகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா நோய் தொற்றினால் பாதித்தவர்கள் 935 பேர்களில் 430 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் அவரவர்கள் வீடுகளிலே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 12 பேர்கள் மட்டும் மருத்துவமனையில் உயர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்து வீட்டிற்கு செல்பவர்கள் 86.48 சதவீதம் ஆகும்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின் மீது குற்றமா? அல்லது கொரோனா காரணத்தினால் கூட்டத்தை அரசு ரத்து செய்தது சட்ட விரோதமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் என்பது அந்தந்த கிராம மக்கள் கலந்து கொள்ளுகின்ற கூட்டமாக இதுவரை நடந்து இருக்கிறது. இதில் அதிகாரிகள் கூட பார்வையாளராக இருப்பார். ஆனால் அதில் வேறு ஒரு நபராக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கூட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். ஸ்டாலின் செய்தது சட்டத்திற்கு புறம்பான செயல். அரசு செய்தது தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

இந்த மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் கொள்முதலில் நெல்லின் ஈரப்பதம் என்பதே பெரிய அளவில் இருக்காது. மழை பெய்தாலும் வெயில் அடித்தால் நெல் காய்ந்து விடும். எனவே ஈரப்பதம் என்பது பெரிய பிரச்சினையாக உருவாக்கி விடாது. இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்லை கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story