சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Oct 2020 11:45 PM GMT (Updated: 4 Oct 2020 5:57 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 760 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சோ்ந்த காஜாமொய்தீன் (வயது 32), முகமது ஷாருகான் (21), அப்துல் ஹமீது (39), திருச்சியை சேர்ந்த ஜலீல் முகமது அலி (33) ஆகிய 4 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. இதனால் 4 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களுடைய உள்ளாடைகளுக்குள்ளும், கால்களில் அணிந்து இருந்த சாக்ஸ்களிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 4 பேரிடம் இருந்தும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 760 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் துபாய் விமான நிலையத்தில் ஒருவர், எங்களுக்கு விமான டிக்கெட் எடுத்து தந்து, செலவுக்கும் பணம் கொடுத்து, அந்த பார்சல்களை எங்களிடம் கொடுத்து சென்னை கொண்டு சென்றால் அதை விமான நிலையத்தில் ஒருவர் வந்து பெற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால் அதில் என்ன இருக்கிறது? என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறினர். 4 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

Next Story