தற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி காங்கிரசில் சேர்ந்தார்


தற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி காங்கிரசில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 4 Oct 2020 9:58 PM GMT (Updated: 4 Oct 2020 9:58 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா ரவி காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவர் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம், கர்நாடகத்தை உலுக்கியது. இந்த நிலையில் அவரது மனைவி குசுமா ரவி, பெங்களூருவில் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடி கொடுத்து டி.கே.சிவக்குமார் கட்சியில் சேர்த்துக் கொண்டார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குசுமா ரவி நன்கு படித்தவர். அவரை ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அவரது பெயரை கட்சியின் மேலிடத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அவர் எங்கள் கட்சியின் பொருத்தமான வேட்பாளராக இருப்பார் என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் அவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது.

சிரா தொகுதி

எங்கள் கட்சியில் இன்று (நேற்று) சிரா தொகுதியை சேர்ந்த ஏராளமான மாற்றுக்கட்சியினர் சேர்ந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இன்னும் பலர் எங்கள் கட்சியில் வந்து சேருவார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story