வாணரப்பேட்டையில் வாலிபரை ஓட ஓட வெட்டி கொல்ல முயற்சி 4 பேருக்கு வலைவீச்சு


வாணரப்பேட்டையில் வாலிபரை ஓட ஓட வெட்டி கொல்ல முயற்சி 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Oct 2020 10:23 PM GMT (Updated: 4 Oct 2020 10:23 PM GMT)

வாணரப்பேட்டையில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சீனிவாசன் (வயது 30). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது திவாகரை, சீனிவாசன் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த திவாகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் சீனிவாசன் தலைமறைவானார். பின்னர் திவாகர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுவை திரும்பிய சீனிவாசன் ராசுஉடையார் தோட்டம் பகுதியில் உள்ள தனது அக்கா மேரியின் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த திவாகர், தனது நண்பர்கள் விக்கி, போஸ்கோ உள்பட 3 பேருடன் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு சென்றார். அவர்களை பார்த்த உடன் சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் அவரை ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டினர். இதில் சீனிவாசனுக்கு தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த உடன் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

வலைவீச்சு

வெட்டுக்காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகர் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story