செல்போன் கடையில் உதிரிபாகங்கள் திருடிய 2 ரவுடிகள் கைது


செல்போன் கடையில் உதிரிபாகங்கள் திருடிய 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 5 Oct 2020 11:10 PM GMT (Updated: 5 Oct 2020 11:10 PM GMT)

காஞ்சீபுரம் அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் மற்றும் செல்போன் திருடிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் உரிமையாளர் ஐயப்பன், அவரது மனைவியுடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பனை தாக்கினர்.

உடனடியாக அவர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் அந்த 2 ரவுடிகளும் கடையில் இருந்த செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

2 பேர் கைது

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த ரவுடிகளை சுமார் 1 மணி நேரத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சென்னை பட்டாபிராமை சேர்ந்த குமார் (வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது,

இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள், பட்டாக்கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story