ஆறுமுகநேரி பஜாரில் பயங்கரம்: புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை முன்விரோதத்தில் வாலிபர் வெறிச்செயல்


ஆறுமுகநேரி பஜாரில் பயங்கரம்: புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை முன்விரோதத்தில் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 Oct 2020 12:18 AM GMT (Updated: 6 Oct 2020 12:18 AM GMT)

ஆறுமுகநேரி பஜாரில் புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கானியாளர் தெருவைச் சேர்ந்தவர் முத்துலிங்கம். இவருடைய மகன் பால்லிங்கம் (வயது 25), கட்டிட தொழிலாளி. மற்ற நேரங்களில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று இரவில் புதுமாப்பிள்ளை பால்லிங்கம் ஆறுமுகநேரி மெயின் பஜாருக்கு வந்தார். அப்போது, அங்குள்ள ஒரு வங்கியின் முன்பு மர்ம நபர் மறைந்து இருந்தார். அவர் திடீரென்று பால்லிங்கத்தை வழிமறித்து, தகராறு செய்தார்.

வெட்டிக் கொலை

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பால்லிங்கத்தின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த நபர் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பால்லிங்கம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

முன்விரோதம்

பால்லிங்கத்திற்கும், ஆறுமுகநேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு கிழக்கு பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின்னர் பால்லிங்கம் இந்த பிரச்சினையில் தலையிடாமல் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஆனால் லிங்கராஜ், பால்லிங்கத்தை பழிவாங்க காத்துக் கொண்டு இருந்தார். இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு லிங்கராஜ் ஆறுமுகநேரி பஜாரில் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு இருந்தார். அங்கு இருந்து தினமும் இரவில் பால்லிங்கம் ஆடுகளுக்கு இலை வாங்குவதற்காக வருவதை நோட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, நேற்று இரவில் பால்லிங்கம் ஆறுமுகநேரி பஜாருக்கு வந்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லிங்கராஜ் அரிவாளால் சரமாரியாக பால்லிங்கத்தை வெட்டியது தெரியவந்தது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதற்கிடையே, தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆறுமுகநேரி பஜாரில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story