ஏரியூரில், சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல் - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


ஏரியூரில், சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல் - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2020 10:15 PM GMT (Updated: 6 Oct 2020 2:00 AM GMT)

ஏரியூரில் சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரியூர்,

ஏரியூரில் உள்ள நேதாஜி நகர் மற்றும் அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்று வர இதுவரை உரிய சாலை அமைக்கப்படவில்லை. சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த பகுதிக்கு சாலை வசதி செய்து தரக்கோரி நேற்று ஏரியூர் பஸ் நிலையத்தில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நேதாஜி நகர் மற்றும் அண்ணா நகருக்கு சாலை வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட ஊருக்குள் வருவது இல்லை. எனவே உடனடியாக எங்களுக்கான சாலை வசதியை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். 6 மாதத்திற்குள் நேதாஜி நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து கிராமமக்கள் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ் புலிகள் அமைப்பு ஆகியவைகளின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சாலை அமைத்துத் தரக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Next Story