திண்டிவனத்தில் லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி - உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பி வந்த போது பரிதாபம்


திண்டிவனத்தில் லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி - உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பி வந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 5 Oct 2020 11:00 PM GMT (Updated: 6 Oct 2020 2:07 AM GMT)

திண்டிவனத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டிவனம்,

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தியாகேசுவரன் (வயது 56). ரெயில்வே ஊழியர். இவரது மனைவி ஜெயா(55). இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். அங்கு உறவினர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தியாகேசுவரன், ஜெயா மற்றும் குடும்பத்தினர் நாகர்கோவிலுக்கு காரில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அயனாவரத்தை சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் வந்த போது முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் முருகனின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதி உருக்குலைந்தது. தொடர்ந்து, அங்கு சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த, தியாகேசுவரன் (56), அவரது மனைவி ஜெயா (55) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த தியாகேசுவரனின் மகன் இமானுவேல் (28), உறவினர்கள் ஆனந்த் (28), லிபன் (15), முருகன்(40) ஆகியோர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இமானுவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story