வேளாண் சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு வரலாற்று பிழை செய்து விட்டது - காட்டுமன்னார்கோவிலில் நடந்த போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு


வேளாண் சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு வரலாற்று பிழை செய்து விட்டது - காட்டுமன்னார்கோவிலில் நடந்த போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு
x
தினத்தந்தி 5 Oct 2020 9:30 PM GMT (Updated: 6 Oct 2020 4:19 AM GMT)

வேளாண் சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு வரலாற்று பிழை செய்து விட்டதாக காட்டுமன்னார்கோவிலில் நடந்த சத்தியாகிரக அறப்போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டம் மற்றும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் தொடக்க விழா காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ.மணி ரத்தினம் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமல் மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அன்வர் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சத்தியாகிரக அறப்போராட்டத்தையும் அவர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் மிகவும் மோசமான சட்டம் என்பதால் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விவசாய சந்தையில் விற்பதற்கான சுதந்திரத்தை காங்கிரஸ் அரசு கொடுத்தது. ஆனால் அந்த சுதந்திர விற்பனை தற்போது பா.ஜனதா அரசால் பறிபோய்விட்டது.

70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் கோதுமைக்கு இணையாக நெல் விலையை உயர்த்தி அறிவித்தது காங்கிரஸ் அரசு ஆகும். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா பெரிய வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்ளது. இதற்கு பெரும் முதலாளிகள், மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தமே காரணம் ஆகும்.

அதுமட்டுமின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. பிரதமர் மோடி தவறான பொருளாதார கொள்கையை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை இருக்க வேண்டும் என்ற விதியை வேளாண் சட்டத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அது போல் கொண்டுவரவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

வேளாண் சட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆதரித்தது, மிகப்பெரிய தவறாகும். அவர் மவுனமாக இருந்திருக்கலாம். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அ.தி.மு.க. அரசு வரலாற்று பிழையை செய்து விட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒத்த கருத்து இல்லை. இவர்கள் எப்படி நாட்டை ஆள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்நாதன், தவர்தாம் பட்டு விசுவநாதன், கிள்ளை சத்தியமூர்த்தி, மருத்துவர் அணி செந்தில்வேலன், மாவட்ட பொருளாளர் வேங்கட கிரி, மாவட்ட மகளிரணி தலைவர் கரோலின் அண்ணாதுரை, கீரை செழியன், மோகன்தாஸ், வட்டாரத் தலைவர்கள் கண்ணன், சங்கர், பாபுராஜன், திருவரசமூர்த்தி, பாண்டியன், தமிழ்வாணன், வைத்தியநாதசுவாமி, நகர தலைவர்கள் இதயத்துல்லா, ரவி, நிர்வாகிகள் சானு ஜாக்கிர், நஜீர் அகமது, இளங்கீரன், பாலசுந்தரம், குமராட்சி ரங்கநாதன், ஜோதிபாஸ், செல்வம், இளைஞர் காங்கிரஸ் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story