விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதியவர் சாவு - கள்ளக்குறிச்சியில் 30 பேருக்கு தொற்று


விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதியவர் சாவு - கள்ளக்குறிச்சியில் 30 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 7 Oct 2020 4:45 AM GMT (Updated: 7 Oct 2020 5:31 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,132 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 98 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 11,346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 688 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சி அருகே உள்ள சக்கராபுரத்தை சேர்ந்த 77 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் விழுப்புரம் அருகே காணையை சேர்ந்த கிராம உதவியாளர், விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் போலீஸ்காரர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 83 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,215 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 9,420 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,010 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 760 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 30 பேருக்கு தொற்று உறுதியானது.

இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 9,450 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story