கடலூர் சித்த மருத்துவ முகாமில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு


கடலூர் சித்த மருத்துவ முகாமில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 7:00 AM GMT (Updated: 7 Oct 2020 6:20 AM GMT)

கடலூர் சித்த மருத்துவ முகாமில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனை, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள சில கல்லூரிகள் தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டு, அங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சித்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 பெண்கள் உள்பட 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 4 குழந்தைகளும் அடங்குவர். இவர்களுக்கு கூத்தப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து தினசரி 3 வேளையும் ஒப்பந்ததாரர் மூலம் உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்று காலை 8.30 மணி அளவில் அந்த முகாமில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பார்சலில் இட்லி கொடுக்கப்பட்டது. இதில் ஒருவரது பார்சலில் இருந்த இட்லியில், பல்லி செத்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர், தன்னுடன் முகாமில் தங்கியிருந்தவர்களை சாப்பிட விடாமல் தடுத்தார். ஆனால் அதற்குள் சுமார் 10 பேர் இட்லியை சாப்பிட்டு விட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த டாக்டரிடம், இதுகுறித்து முறையிட்டனர். அப்போது அவர், தற்போது வழங்கப்பட்ட இட்லியை யாரும் சாப்பிட வேண்டாம். அதற்கு பதில் வேறு இடத்தில் இருந்து காலை உணவு வரவழைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படும்.

மேலும் இட்லியில் பல்லி கிடந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் இட்லியை சாப்பிட்ட 10 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காலை 10 மணிக்கு வேறு ஒரு ஓட்டலில் இருந்து ஆட்டோவில் இட்லி கொண்டு வரப்பட்டு, முகாமில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story