சிகிச்சையில் இருந்து மாயமான விவசாயி, மருத்துவமனை வளாகத்தில் பிணமாக மீட்பு - கொரோனாவால் இறந்தாரா? அதிகாரிகள் விசாரணை


சிகிச்சையில் இருந்து மாயமான விவசாயி, மருத்துவமனை வளாகத்தில் பிணமாக மீட்பு - கொரோனாவால் இறந்தாரா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2020 6:30 AM GMT (Updated: 7 Oct 2020 6:20 AM GMT)

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து மாயமான விவசாயி, மருத்துவமனை வளாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொரோனாவால் இறந்தாரா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்,

நடுவீரப்பட்டை சேர்ந்த 40 வயதுடைய விவசாயி ஒருவருக்கு, கடந்த 2-ந்தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள், சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த விவசாயி நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.

இதை பார்த்த டாக்டர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அவரது பெற்றோர், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகிச்சையில் இருந்து மாயமான விவசாயியை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று இரவு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், மருத்துவமனைக்கு சென்று இறந்து கிடந்தவரை பார்வையிட்டனர். அப்போது அவர், சிகிச்சையில் இருந்து மாயமான விவசாயி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இறந்து கிடந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்து கிடந்த விவசாயிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதனால் தான் அவர் இறந்துள்ளதாகவும் தகவல் பரவியது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் விவசாயி கொரோனா தொற்றால் இறந்தாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வார்டில் இருந்து மாயமான விவசாயி, மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story