நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.441 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.441 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2020 2:56 PM GMT (Updated: 7 Oct 2020 2:56 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.441 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

நல்லம்பள்ளி பஸ் நிலையத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அணுகு சாலை, தடுப்புச்சுவர், குழாய் பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர் வரவேற்றார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் வெங்கடேஸ்வரன், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, சுருளிநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூக்கடை முனுசாமி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ஜோதி பழனிசாமி, பெரியண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி கோட்ட பொறியாளர் குலோத்துங்கன் நன்றி கூறினார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு சாலை மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.441 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து அரசுத்துறைகள் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு தேவையான நல திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வருகிறது என்று பேசினார்.

Next Story