காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனை கரம்பிடித்த துமகூரு இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனை கரம்பிடித்த துமகூரு இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 7 Oct 2020 10:10 PM GMT (Updated: 7 Oct 2020 10:10 PM GMT)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் துமகூரு இளம்பெண், காதலனை கரம்பிடித்தார். திருமணம் முடிந்தகையோடு இருவரும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பாகல்கோட்டை,

துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா மேலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. அதுபோல் பாகல்கோட்டை (மாவட்டம்) டவுன் நவநகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். ஐஸ்வர்யா கடந்த 2016-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவாக சித்ரதுர்காவுக்கு சென்றுள்ளார். அப்போது ஆகாசும் அங்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் சந்தித்த போது காதலில் விழுந்தனர்.

அப்போதே இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யா, ஆகாசின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

17 வயதில் திருமணம்

இதற்கிடையே 17 வயதான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு அவரது பெற்றோர், ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் தனக்கு திருமணம் பிடிக்கவில்லை எனக் கூறி ஐஸ்வர்யா சில நாட்களிலேயே தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதற்கு மத்தியில் ஐஸ்வர்யா தனது காதலன் ஆகாசுடன் செல்போனில் பேசி சம்பவம் பற்றி கூறியதுடன், காதலையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தனது வீட்டில் இருந்து வெளியேறி பாகல்கோட்டைக்கு வந்துள்ளார். பின்னர் தனது காதலன் ஆகாசை சந்தித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு ஆகாசின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீசில் தஞ்சம்

இதனால் ஆகாசும், ஐஸ்வர்யாவும் நண்பர்கள் முன்னிலையில் நவநகரில் உள்ள வீரபத்ரேஸ்வர சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையே ஐஸ்வர்யாவை தேடி அவரது தந்தையும், சகோதரரும் பாகல்கோட்டைக்கு வந்தனர். இதனால் தங்களை அவர்கள் பிரித்து விடுவார்கள் என நினைத்த ஆகாசும், ஐஸ்வர்யாவும் பாதுகாப்பு கேட்டு பாகல்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு அவர்கள் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், தாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2016-ம் ஆண்டு முதலே நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். இதற்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஸ்வர்யாவுக்கு அவரது பெற்றோர் 17 வயதிலேயே ஒருவருடன் திருமணம் செய்துவைத்தனர். ஆனால் அவர் வாழப்பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறோம். எனவே நாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

காலில் விழுந்து கெஞ்சல்

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை, சகோதரர் ஆகியோர் பாகல்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஐஸ்வர்யாவை பார்த்ததும் அவரது தந்தை, தன்னுடன் வந்துவிடும்படி கூறி கண்ணீர் விட்டு கதறினார். ஆனால் எக்காரணம் கொண்டும் உங்களுடன் வரமாட்டேன். நான் ஆகாசை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் எனக் கூறினார். இதனால் செய்வதறியாது திகைத்த ஐஸ்வர்யாவின் தந்தை, ஆகாசின் காலில் விழுந்து கதறி அழுதார். தனது மகளை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி அவர் கெஞ்சினார்.

ஆனால் ஐஸ்வர்யாவும், ஆகாசும் நாங்கள் 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எங்களை வாழவிடுங்கள் என பிடிவாதமாக கூறினர். இதையடுத்து போலீசார், ஐஸ்வர்யாவின் தந்தை, சகோதரரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story