13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் எடியூரப்பா காணொலி காட்சி மூலம் ஆலோசனை


13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் எடியூரப்பா காணொலி காட்சி மூலம் ஆலோசனை
x
தினத்தந்தி 7 Oct 2020 10:23 PM GMT (Updated: 7 Oct 2020 10:23 PM GMT)

13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார்.

பெங்களூரு,

13-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சி குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார்.

இதில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

பெங்களூருவில் இதுவரை 12 விமான கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி நடத்த கர்நாடகம் உகந்த மாநிலமாக திகழ்கிறது. இந்த நிலையில் 13-வது விமான கண்காட்சி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முறை பெங்களூருவில் இந்த கண்காட்சி நடைபெறுவது கர்நாடகத்திற்கு பெருமை அளிப்பதாக உள்ளது. கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும், விமான கண்காட்சியை நடத்துவது கர்நாடக அரசு மற்றும் ராணுவத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

மருத்துவ பரிசோதனை

இந்த கண்காட்சியில் இடம் பெற தனியார் நிறுவனங்களுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட உடனேயே தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்துள்ளன. இது சாதகமான போக்கை காட்டுகிறது. கொரோனா வைரசை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலை கர்நாடக அரசு தீவிரமாக பின்பற்றி இந்த கண்காட்சியை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விமான கண்காட்சியில் கலந்துகொள்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கண்காட்சி நடைபெறும் இடத்தில் அடிக்கடி சானிடைசர் கொண்டு தூய்மை படுத்தப்படும். சமூக இடைவெளியை பின்பற்றுவதை அரசு உறுதி செய்யும். இந்திய விமானத்தொழில் வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு 25 சதவீதமாக உள்ளது. விமான ஏற்றுமதியில் கர்நாடகத்தின் பங்கு 65 சதவீதமாகவும், ராணுவ பணிகளுக்கு தேவையான ஹெலிகாப்டர் மற்றும் விமான உற்பத்தியில் மாநிலத்தின் பங்கு 67 சதவீதமாகவும் உள்ளது.

விமானவியல் கொள்கை

நாட்டிலேயே விமானவியல் கொள்கையை வகுத்து வெளியிட்ட ஒரே மாநிலம் கர்நாடகம் தான். எச்.ஏ.எல்., பி.எச்.இ.எல்., பி.இ.எல். போன்ற முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் பெங்களூருவில் உள்ளன. பெலகாவியில் தனியார் விமானத்துறை பொருளாதார மண்டலம், பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே 1,000 ஏக்கரில் விமானவியல் பூங்கா, துமகூருவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்பேட்டை போன்றவை உள்ளன. கர்நாடகத்தில் அமையவுள்ள பயணிகள் விமான பராமரிப்பு நிறுவனத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய முடிவு செய்துள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

இந்த கூட்டத்தில் ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசும்போது கூறியதாவது:-

அமைதிக்காக ராணுவத்துறையை மேலும் பலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இந்தியா மிகப்பெரிய ராணுவ உற்பத்தி மையமாக திகழ்கிறது. இந்த விமான கண்காட்சி மூலம், விமானத்துறையில் முதல் 5 இடங்களில் இந்தியா இடம் பெற வேண்டும் என்பது நமது நோக்கம். ராணுவத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் இந்தியாவை ராணுவ உற்பத்தி கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்பு இல்லாமல் ராணுவ விவகாரங்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

இந்த கூட்டத்தில் ராணுவத்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், பல்வேறு நாடுகளின் தூதர்கள், கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story