எங்கும் தூய்மையாக காட்சி அளிக்கிறது: புத்துயிர் பெற்ற கோயம்பேடு மார்க்கெட்


எங்கும் தூய்மையாக காட்சி அளிக்கிறது: புத்துயிர் பெற்ற கோயம்பேடு மார்க்கெட்
x
தினத்தந்தி 7 Oct 2020 11:07 PM GMT (Updated: 7 Oct 2020 11:07 PM GMT)

கொரோனா காலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு எங்கும் தூய்மையாக காட்சி அளிக்கிறது.

சென்னை,

கொரோனா பரவல் தொடக்க காலத்தில், கோயம்பேடு மார்க்கெட் கொரோனா தொற்றின் கூடாரமாக விளங்கியது. இதனால், கடந்த மே மாதம் 5-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் இயங்கி வந்த காய்கறி மொத்த வியாபாரமானது மே 11-ந் தேதி முதல் பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசைக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டானது கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கடந்த மாதம் 28-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது. திருமழிசையில் இயங்கி வந்த காய்கறி மொத்த வியாபார கடைகள் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்க தொடங்கின.

வழிகாட்டு நெறிமுறைகள்

பொதுவாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் என்றாலே ஒரு அடுக்கு காய்கறி கழிவுகள் நிறைந்ததாகவே காணப்படும். எப்போதும் ஒருவித ஈரப்பதத்துடன் சேரும் சகதியுமாகவே காட்சி அளிக்கும். இவற்றுக்கு மத்தியில் தொய்வில்லாமல் வியாபாரம் நடைபெறும். ஆனால், தற்போது கொரோனா காலம் என்பதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஒரு வழிப்பாதையும் கடைப்பிடிக்கப்படுகிறது. காய்கறிகளை வாங்குவதற்கு வருகை தரும் சில்லரை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

வியாபாரிகள் புகழாரம்

கோயம்பேடு மார்க்கெட்டின் நுழைவு வாயில்கள் காலை 9 மணி முதல் அடைக்கப்படுகின்றன. பின்னர், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதனால், தற்போது கோயம்பேடு காய்கறி மார்க்கெட் எங்கு பார்த்தாலும் தூய்மையாக காட்சி அளிக்கிறது.

இதனால், கொரோனா காலத்தில் கெட்ட நேரத்திலும் நல்லது நடந்துள்ளதாகவும், கோயம்பேடு மார்க்கெட் மறுபிறவி எடுத்து தூய்மையாக காட்சி அளிக்கிறது என்றும் வியாபாரிகள் புகழாரம் சூட்டுகின்றனர்.

கொரோனா பரிசோதனை

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் வருபவர்களுக்கு நுழைவு வாயில் மற்றும் மார்க்கெட்டின் உள்பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக கட்டுப்படும் என்று தெரிகிறது.

Next Story