செயலிழக்க செய்யும் போது வெடிபொருள் வெடித்து போலீஸ்காரர் காயம்


செயலிழக்க செய்யும் போது வெடிபொருள் வெடித்து போலீஸ்காரர் காயம்
x
தினத்தந்தி 7 Oct 2020 11:12 PM GMT (Updated: 7 Oct 2020 11:12 PM GMT)

செயலிழக்க செய்யும் போது வெடிபொருள் வெடித்து போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெடி தயாரிப்பு மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக காதர் மைதீன் என்பவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.

அவர் வைத்திருந்த வெடி தயாரிப்பு மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது கோர்ட்டு வெடி பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை செயலிழக்க செய்யும்படி உத்தரவிட்டது. இதையடுத்து வெடிபொருட்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் உத்திரமேரூர் அடுத்த எடமச்சி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் வெடிபொருட்களை செயலிழக்க செய்தனர்.

போலீஸ்காரர் காயம்

சிறிது நேரத்தில் வெடிபொருட்கள் வெடித்தன. அப்போது அங்கு இருந்த போலீசார் வெடி பொருட்கள் வெடித்து விட்டதாக நினைத்து அருகில் சென்று மீதமுள்ள வெடிபொருட்களை தீயிட்டு எரிக்க முற்பட்டனர். அப்போது ஒரு வெடிபொருள் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகில் இருந்த போலீஸ்காரர் பாலமுருகன் காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story