முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2020 12:03 AM GMT (Updated: 8 Oct 2020 12:03 AM GMT)

முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

தென்காசி,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே மனோகரன் எம்.எல்.ஏ. பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் கீழப்பாவூரில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெயராமன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

இதனை தென்காசி பழைய பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ், பட்டு வளர்ச்சித்துறை பீர் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தென்காசி அருகே உள்ள மேலகரத்தில் செயலாளர் கார்த்திக் குமார் தலைமையிலும், இலஞ்சியில் செயலாளர் மயில் வேலன் தலைமையிலும், சுந்தரபாண்டியபுரத்தில் ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையிலும் மற்றும் குற்றாலத்திலும் அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

சுரண்டை- கடையநல்லூர்

சுரண்டை அண்ணா சிலை அருகே சுரண்டை நகர செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் தலைமையில் அ.தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில், அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும்கொண்டாடினர்.

Next Story