காஞ்சீபுரம் அருகே ரூ.4 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே ரூ.4 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 11:27 PM GMT (Updated: 8 Oct 2020 11:27 PM GMT)

காஞ்சீபுரம் அருகே ரூ. 4 லட்சம் குட்கா சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் நேற்று காலை போலீசாருடன் காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது பெங்களூருவில் இருந்து திம்மசமுத்திரத்திற்கு ஒரு மினி வேன் மின்னல் வேகத்தில் வந்தது. அதை இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சைகை காட்டி மடக்கி பிடித்தார். அந்த வேனை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் 210 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். உடனடியாக பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் போலீசாருடன் குட்கா கடத்தி வந்த அந்த வேனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துசென்றனர்.

2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து குட்காவை எடுத்து வந்து திம்மசமுத்திரம் பகுதியில் வைத்து பிரித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அனுப்ப தயாராக இருந்தது தெரிந்தது. இதையொட்டி ஒரு கார், 2 மினி வேன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை திருவேற்காடு செந்தமிழ் நகர், பாரதியார் நகரை சேர்ந்த வீரமணி (37, அவரது நண்பர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சிவா (37) ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட வீரமணி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டும்போது பெங்களூருவை சேர்ந்த குட்கா வியாபாரி ஹரிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதையொட்டி பல ஆண்டுகளாக இவர்கள் ஹரிசிடம் தொடர்புகொண்டு குட்கா மூட்டைகள் வாங்கியது தெரியவந்தது. வீரமணி மீது திருவேற்காடு, மணவாளநகர் போலீஸ் நிலையத்திலும் குட்கா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.

வீரமணி திருவேற்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

Next Story