ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது ஒரேநாளில் 132 பேருக்கு தொற்று; பெண் பலி


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது ஒரேநாளில் 132 பேருக்கு தொற்று; பெண் பலி
x
தினத்தந்தி 9 Oct 2020 12:31 AM GMT (Updated: 9 Oct 2020 12:31 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் ஒருவர் பலியானார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் புதிதாக மாவட்டம் முழுவதும் 132 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது.

பெண் பலி

இதற்கிடையே ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோதிலும் அன்றே அவர் இறந்தார்.

அவருடைய சளி மற்றும் ரத்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

118 பேர் வீடு திரும்பினர்

அதேநேரம் நேற்று மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 118 பேர் குணம் அடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 668 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,073 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story