ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி; மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி; மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 10 Oct 2020 11:00 PM GMT (Updated: 10 Oct 2020 7:45 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 60 சதவீதத்திற்கும் மேல் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் 5 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு கொரோனாவின் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதற்கிடையில் பெருந்துறை பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதேபோல் ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், கடந்த 8-ந்தேதி உடல் நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றே அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய ரத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

பவானி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 28-ந்தேதி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 8-ந்தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 129 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மொத்தம் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 949 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,068 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story